தொகுதி மக்களுக்கு 2,000 கிலோ சிக்கன் மற்றும் 15,000 முட்டைகள் வழங்கிய எம்எல்ஏ
சித்தூர்: ஆந்திராவில் எம்எல்ஏ ஒருவர் தொகுதி மக்களுக்கு 2,000 கிலோ சிக்கன் மற்றும் 15,000 முட்டைகள் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5360 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 164 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் எம்எல்ஏ ஒருவர் தொகுதி மக்களுக்கு 2,000 கிலோ சிக்கன் மற்றும் 15,000 முட்டைகள் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவின் காளஹஸ்தி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் பிய்யப்பு மதுசூதன் ரெட்டி. இவர் புதன்கிழமையன்று தனது தொகுதிக்குட்பட்ட ஏற்பேடு கிராமத்தில் மக்களுக்கு 2,000 கிலோ சிக்கன் மற்றும் 15,000 முட்டைகள் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ சிக்கன் மற்றும் பத்து முட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் வெகுவாகப் பரவி வரும் நிலையில் மக்கள் சத்தான உணவைச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இது வழங்கப்பட்டது.
காளஹஸ்தி நகரம் நோய் பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் நோய் பரவலைத் தடுக்க வெளியே செல்லக் கூடாது. அரசின் கட்டுபாடுகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.