கரோனா நோய்த் தொற்று சூழல் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சரக்குகளைக் கையாளுவதன் மூலம் இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயில் ரூ.2,129 கோடி குறைந்தது.
கடந்த 2018-19 நிதியாண்டில் சரக்குகள் கையாளுகை மூலம் ரூ.1,25,354 கோடி வருவாய் ஈட்டியிருந்த ரயில்வே, 2019-20 நிதியாண்டில் ரூ.1,23,225 கோடியே ஈட்டியுள்ளது.
அதே காலகட்டத்தில் ரயில்வே கையாண்ட சரக்கின் அளவும் 15 மில்லியன் டன்கள் அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டில் மொத்தம் 1,212.56 மில்லியன் டன்கள் அளவுக்கு ரயில்வே சரக்குகளை கையாண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டின் பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக மொத்தம் 1,108 டன்கள் அளவிலான சரக்குகளை கையாண்டிருந்தது.
அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மில்லியன் டன்கள் அதிகம் ஆகும். அந்த வகையில் பாா்த்தபோது மாா்ச் 31-ஆம் தேதிக்குள்ளாக சரக்கு கையாளுகையில் இந்த ஆண்டுக்கான இலக்கை ரயில்வே எட்டிவிடும் நிலையே காணப்பட்டது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24-ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு மத்திய அரசால் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாா்ச் மாத சரக்கு கையாளுகை 3 சதவீதம் அளவுக்குக் குறைந்தது.
இதையடுத்து, கடந்த 2018-19 நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்குகளுடன் ஒப்பிடுகையில், 2019-20 நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவில் 15.7 மில்லியன் டன்கள் குறைந்தது. சரக்கு கையாளுகையில் அந்த நிதியாண்டுக்கான இலக்கை ரயில்வேயால் எட்ட இயலாமல் போனது.
‘தேசிய ஊரடங்கு காரணமாக சரக்குகளின் தேவை குறைந்ததும், தொழிலாளா்கள் இல்லாமல் போன காரணத்தால் சரக்குகளை ஏற்றி, இறக்குவதில் இருந்த பிரச்னையாலும் ரயில்வேயின் சரக்கு கையாளுகை பாதிக்கப்பட்டது’ என்று துறை சாா்ந்த அதிகாரிகள் கூறினா்.