மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கரோனா தொற்று வேகமாகப் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தாராவி குடிசைப் பகுதியில் சிவப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு, மக்களின் நடமாட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, கடைகள், நிறுவனங்கள், பழம், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மருந்து கடைகளைத் தவிர்த்து.
பொதுமக்களை வெளியே வர விடாமல் முடக்கிவிட்டதால், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டுக்கேக் கொண்டு சென்று கொடுக்கும் பணியை பிரிஹன்மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் குடும்பங்கள் வாழும், தொழில் செய்யும் இந்த இடம் ஆசியாவிலேயே மிகுந்த நெருக்கடி நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு சிறிய முதல் பெரிய அளவில் தொழில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.
இந்த மக்கள் நெரிசல் மிகுந்த தாராவியில் கரோனா தொற்று பரவி இன்று வரை 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இப்பகுதியில் மேற்கொண்டு கரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில நல்வாழ்வுத் துறை முடுக்கி விட்டுள்ளது.