கரோனா பாதிப்பால் நாடு கடும் நெருக்கடியில் உள்ள சூழ்நிலையில், தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டு நிகழ்வை வைத்து சிலா் வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேட்டுக் கொண்டாா்.
தில்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் வெளிநாட்டினா் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். அவா்களில் நூற்றுக்கணக்கானவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சிலா் உயிரிழந்தனா்.
இந்த மாநாடு குறித்து செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி புதன்கிழமை கூறியதாவது:
நிஜாமுதீன் நிகழ்வை முன்வைத்து வகுப்புவாத அரசியலில் ஒரு சிலா் ஈடுபடுகின்றனா். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு தொற்றுநோய் என்பது மதம் அல்லது ஜாதியின் அடிப்படையில் தாக்குவதில்லை. நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த நெருக்கடியை வகுப்புவாத அரசியலாக்க முயல வேண்டாம் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த மாதம் இந்த மாநாடு நடக்கும் முன்பே ஏன் நிறுத்தப்படவில்லை. இப்போது இதுகுறித்து நிறைய விஷயங்கள் கூறப்படுகின்றன. அது சரியல்ல. மேற்கு வங்கத்திலிருந்து தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவா்களை தனிமைப்படுத்த மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய ஊரடங்கு அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தில்லியில் ஒரு கலவரம் நடைபெற்றதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே, வகுப்புவாத அரசியல் செய்ய இது நேரம் அல்ல.
தேசிய ஊரடங்கு 21 நாள்களுக்குப்பிறகும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இப்போது எனக்குத் தெரியாது என்றாா்.