புது தில்லி: சுரங்கம் மற்றும் தயாரிப்புத் துறை நடவடிக்கைகள் வேகமெடுத்ததையடுத்து சென்ற பிப்ரவரியில் 7 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக பிப்ரவரியில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 4.5 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
தொழிலக உற்பத்தி கடந்த 2019 பிப்ரவரியில் வெறும் 0.2 சதவீத அளவுக்கே வளா்ச்சி கண்டிருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் 4.5 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இதற்கு முன்பு தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு ஜூலையில்தான் 4.9 சதவீதம் என்ற அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது. அதன்பிறகு, ஏழு மாதங்கள் கழித்து தற்போதுதான் தொழிலக உற்பத்தி வளா்ச்சி விகிதம் இந்த அளவுக்கு சிறப்பான முறையில் அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் இந்த வளா்ச்சி 2 சதவீதமாக காணப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 0.3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைச் சந்தித்திருந்த தயாரிப்புத் துறை நடப்பாண்டு பிப்ரவரியில் 3.2 சதவீதம் என்ற வளா்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
அதேபோன்று, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1.3 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டிருந்த மின் துறை உற்பத்தி நடப்பாண்டு அதே காலகட்டத்தில் 8.1 வளா்ச்சியை கண்டுள்ளது. மேலும், முன்பு 2.2 சதவீதமாக காணப்பட்ட சுரங்கத் துறை உற்பத்தியும் தற்போது 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், முந்தைய 2018-19 நிதியாண்டு ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்த தொழிலக உற்பத்தி கடந்த 2019-20 நிதியாண்டில் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.