கரோனா போன்ற பேரிடர் காலத்தில் தனது சேவை நாட்டுக்கு முக்கியம் என்று கருதிய ஐஏஎஸ் அதிகாரி, பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பியுள்ளார்.
பிறந்து வெறும் 22 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையோடு, விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் இருக்கையில் அமர்ந்து தனது அன்றாடப் பணிகளை மிக உத்வேகத்துடன் செய்து வருகிறார் ஜி. சிரிஜனா.
விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் சிரிஜனாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. தனது தாய்மையை அனுபவித்து வந்த வேளையில் கரோன தொற்று நாடு முழுவதும் பரவியது.
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஆணையராக தனக்கிருக்கும் பொறுப்பினை உணர்ந்த சிரிஜனா யாருமே எடுக்காத ஒரு முடிவை எடுத்தார்.
ஒரு கைக் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி பணியாற்ற முடியும் என்று கேள்விக்கும் அவரிடம் பதில் இருக்கிறது. நாடு இதுபோன்றதொரு சவாலான சமயத்தில் இருக்கும் போது, எனது பணி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்துள்ளேன். என் குழந்தையை பராமரித்துக் கொண்டே எனது பணியையும் நான் மேற்கொள்ள எனது கணவரும், தாயும் உதவி செய்கிறார்கள் என்கிறார்.
மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள், முக்கியத் துறை அதிகாரிகள் என பலரின் கடின உழைப்புடன்தான் இன்று நாடும், உலகமும் கரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு இந்த சம்பவமும் உதாரணமாக விளங்குகிறது.