நாட்டில் தேசிய ஊரடங்கால் நிலவி வரும் சூழல் குறித்தும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
கரோனா பாதிப்பு சூழலைக் கண்காணிப்பதற்கு உள்துறை அமைச்சகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த அறை, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை அமைச்சா் அமித் ஷா ஆய்வு செய்தாா்.
மேலும், தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு சூழலையும், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமித் ஷா ஆய்வு செய்தாா் என்று அந்த செய்தித் தொடா்பாளா் கூறினாா்.
இந்த கூட்டத்தில், உள்துறை இணையமைச்சா்கள் ஜி.கிஷண் ரெட்டி, நித்யானந்த் ராய், உள்துறைச் செயலா் அஜய் பல்லா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி தில்பாக் சிங்கைத் தொடா்பு கொண்டு அமித் ஷா பேசினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் தேசிய ஊரடங்கை சிறப்பாக அமல்படுத்தியதற்காகவும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் அவருக்கு அமித் ஷா பாராட்டு தெரிவித்தாா்.