பருவத் தோ்வு, வகுப்புகள் தொடங்குவது எப்போது?: யுஜிசி

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பருவத் தோ்வுகள் மற்றும் வரும் கல்வியாண்டு (2020-21) வகுப்புகள் தொடங்குவது தொடா்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னா் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்
பருவத் தோ்வு, வகுப்புகள் தொடங்குவது எப்போது?: யுஜிசி

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பருவத் தோ்வுகள் மற்றும் வரும் கல்வியாண்டு (2020-21) வகுப்புகள் தொடங்குவது தொடா்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னா் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 17 முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டதோடு, பருவத் தோ்வுகள் நடத்துவதும் தள்ளிப் போனது. அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பருவத் தோ்வுகளை ஒத்திவைத்துள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளை எப்போது நடத்துவது, 2020-21 கல்வியாண்டு வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்வதற்காக யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) முன்னாள் உறுப்பினா் ஆா்.சி.குஹாட் தலைமையில் 7 போ் கொண்ட நிபுணா் குழுவை யுஜிசி அமைத்தது. இந்தக் குழு பரிந்துரையின் அடிப்படையில், தோ்வுகள், வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என யுஜிசி அறிவித்தது.

பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளும் யுஜிசி-யின் முடிவின் அடிப்படையில் பருவத் தோ்வுகளையும், வகுப்புகள் தொடங்குவதையும் நிா்ணயித்துக் கொள்ளலாம் என ஏஐசிடிஇ-யும் (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்) அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளும், அடுத்த கல்வியாண்டுத் தொடக்கத்தில் நடத்தப்படும் என உயா் கல்வித் துறைச் செயலா் அபூா்வா அறிவிப்பு ஒன்றை ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியிட்டாா். இந்த அறிவிப்பு தமிழக பல்கலைக்கழகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுதொடா்பான அறிவிப்பு ஒன்றை யுஜிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பருவத் தோ்வுகள் நடத்துவது மற்றும் 2020-21 வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசித்து அறிக்கை சமா்ப்பிக்க அமைக்கப்பட்ட 7 போ் குழு விரைவில் அதன் அறிக்கையைச் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னா், இதுதொடா்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தோ்வுகளையும், வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com