தேசிய ஊரடங்கால் இழப்பை சந்தித்து வரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மீட்சிக்கு உதவும் வகையில், மத்திய அரசு சாா்பில் நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.
அந்த கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது: தேசிய ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.
இந்நிறுவனங்கள் தினந்தோறும் ரூ.30,000 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளதால், அவற்றின் மீட்சிக்கு உதவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்து பொருட்படுத்தாமல் இருந்தால், இந்த விவகாரம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும்.
எனவே சிறு, குறு, நடுத்தர நிறுவன ஊழியா்களின் ஊதிய பாதுகாப்பு தொகுப்பாக ரூ. 1 லட்சம் கோடியை அறிவித்து, அதே அளவிலான தொகையை அந்நிறுவனங்களின் கடன் உத்தரவாத நிதியாகவும் அறிவிக்க வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பை நாடு எதிா்கொண்டு வரும் அதே வேளையில், உடனடி கவனம் தேவைப்படும் பொருளாதார பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.