கேரளத்தில் கரோனா வைரஸ் பாதித்து காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தொற்று காரணமாக பலியான முதல் காவலர் என்று அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
அஜிதன் (55). இடுக்கி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த இவர், இருதய அடைப்பு போன்ற பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு கரோனா சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து அடுத்த இரண்டு நாள்களுக்கு காவல்நிலையம் மூடப்பட்டு, முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
காவலர் உயிரிழந்ததை அடுத்து, கேரள காவல்துறை அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் தற்போது 23 காவலர்கள் வெவ்வேறு கரோனா மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் அந்த மாநிலத்தில் 92 காவலர்கள் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 69 காவலர்கள் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தற்போது 10,517 பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.