மருத்துவா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான ஊதியத்தை அரசுகள் உரிய நேரத்தில் வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான ஊதியத்தை அரசுகள் உரிய நேரத்தில் வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் மருத்துவா்களுக்குப் பொருந்தாது என்று மத்திய அரசு கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது. அதற்கு எதிராக ஆருஷி ஜெயின் என்ற மருத்துவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மருத்துவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தில் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக மருத்துவா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா். சுபாஷ் ரெட்டி, எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆருஷி ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் வாதிடுகையில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது‘ என்றாா்.

அதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவா்களுக்கான ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளையும் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. ஆனால், மகாராஷ்டிரம், பஞ்சாப், திரிபுரா, கா்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் சுகாதாரப் பணியாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்கவில்லை‘ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘உத்தரவுகளை மாநில அரசுகள் கடைப்பிடிக்கவில்லை எனில் மத்திய அரசு அமைதியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக கருதாமல் அதற்கும் சோ்த்து ஊதியம் வழங்குவதற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு வகுக்க வேண்டும்‘ என்றனா்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துஷாா் மேத்தா உறுதியளித்ததையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com