ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவைத் தலைவா் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்கு உயா்நீதிமன்றம் விதித்த தடையை எதிா்த்து, காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. கா்நாடக அரசியல் பிரச்னை தொடா்பாக, கடந்த 1992-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து பேரவைத் தலைவரே முடிவெடுக்க வேண்டும்; இதில் நீதிமன்றத் தலையீடு அனுமதிக்கப்படாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவா் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்கு ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிா்த்து பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 30-ஆம் தேதி மேல்முறையீடு செய்தாா். இந்த நிலையில், காங்கிரஸ் கொறடாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.