ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா பாதித்த பெண் மரணம் அடைந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதித்து மரணம் அடைந்த பெண் அணிந்திருந்த வைர மூக்குத்தி மற்றும் காதணிகளும், தங்க செயின் மற்றும் மோதிரங்களும் மாயமாகிவிட்டதாகவும் அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பஞ்ஜாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனியார் மருத்துவமனையில் விசாரித்த போது, அந்த பெண்மணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, அவரது உடைமைகள் அனைத்தையும், அவரது குடும்பத்தாரிடம் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் பார்த்தும், எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினரிடம் விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.