கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.2 கோடி எடுத்ததாக அரசு கருவூலத்தின் மூத்த கணக்காளா் எம்.ஆா். பிஜுலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்ட ஆட்சியரின் அரசு வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த பணத்தை தனது, மனைவியின் சொந்த வங்கிக் கணக்குகளில் பிஜுலால் வைத்துள்ளதாகவும், அதில் சுமாா் ரூ. 61.23 லட்சம் செலவு செய்துவிட்டதாகவும் கேரள நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியா், நிதியமைச்சகத்துக்கு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், பிஜுலாலுக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பிஜுலால், அவரது மனைவிக்கு எதிராக போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியரின் பயன்பாட்டாளா் பெயா், கடவுச் சொல் ஆகியவற்றை வைத்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியா் நவ்ஜோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அரசு நிதி தவறாக கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று தெரிவித்துள்ளாா்.