கடந்த இரு தினங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்பட அரசியல் பிரமுகர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்தர தேவ் சிங், உ.பி. நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகேந்திர சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இன்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட சிலரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.