கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சித்தராமையா தனது டிவிட்டரில், எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா? என கவனித்து தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஞாயிற்றுகிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிசைசை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 4,752 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,39,571ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கரோனாவிலிருந்து இதுவரை 62,500 குணமடைந்த நிலையில் 2,594 பேர் பலியாகியுள்ளனர்.