பரூய்ப்பூர்: மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசமாயின.
இன்று அதிகாலை 2 மணியளவில், பரூய்புர் கசாரி சந்தையில் உள்ள துணிக் கிடங்கில் இருந்து தீ பரவியதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், துரித வேகத்தில் தீ மளமளவென அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளுக்கும் பரவியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தப் போராடின. ஆனால், அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், கொல்கத்தாவில் இருந்து தண்ணீர் வரவழைக்கப்பட்டு, காலை 7 மணிக்குத்தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து நேரிட்ட இடத்தில் ஏராளமான துணிக் கிடங்குகளும், கடைகளும் இருந்ததால், தீ மளமளவெனப் பரவியதாகவும், இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.