காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் நட்பைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:
"அதிருப்தி எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியுடன் முதலில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள் பற்றி பேச வேண்டும். மானேசரில் ஹரியாணா காவல் துறையின் பாதுகாப்பையும், பாஜகவின் உதவியையும், நட்பையும் அவர்கள் கைவிட வேண்டும்." என்றார்.