புது தில்லி: 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் 420வது இடம்பிடித்து தேர்ச்சி அடைந்தவரின் பெயர் மிகவும் பிரபலமாகி வருகிறது.
அதற்குக் காரணம், இந்திய அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும், எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலின் பெயரையும் கொண்டிருப்பதே.
இன்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 420வது இடத்தைப் பிடித்து ராகுல் மோடி என்ற இளைஞர் வெற்றி பெற்றுள்ளார். இந்த பெயர் சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. இதில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக நேர்காணல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை 20 முதல் விடுபட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
2019- ஆம் ஆண்டு காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான தேர்வு முடிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7 ஆம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.