கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் பிரதமா் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் மாதம்தோறும் சுமாா் 75 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கரோனா தொற்று மற்றும் அதைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தலா 75 கோடி பேருக்கு 37.5 லட்சம் டன் உணவுதானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் 36.54 லட்சம் டன் உணவு தானியங்கள் 73 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 118 லட்சம் கோடி டன் உணவுப் பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 93.5 சதவீதத்தை விநியோகித்துவிட்டதாக அவை அறிவித்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.