புதுதில்லி: நாட்டில் ஒரு நாளில் மட்டும் 7 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் 68 சதவிகிதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 53,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,80,884-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 68.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 2.01 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கரோனா பரிசோதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக 6 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 500 கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நிலையாக செய்யப்படுகின்றன. பரிசோதனகள் எண்ணிக்கையை அதிகரிப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால், மாநில அரசுகள் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முறையாக தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தில் குணமடைவோர் விகிதம் 7.69 சதவிகிதமாக இருந்தது. மே மாதம் குணமடைவோர் விகிதம் 26.59 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூன் மாதம் 48.37 சதவிகிதமாக அதிகரித்தது. தற்போது 68.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கைக்கும், குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. மொத்தமாக வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 8,52,137-ஆக உள்ளது.
கரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பணிகளால் உயிரிழப்புகள் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 2.01-ஆக குறைந்துள்ளது. என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.