சண்டிகர்: ஒரு போர் வீரரைப் போல கரோனவை எதிர்கொள்ளுங்கள் என்று பஞ்சாப் மாநில மக்களுக்கு முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மாநில மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில், ஒரு போர் வீரரைப் போன்று கரோனாவை எதிர்கொள்ளுங்கள். எனது ராணுவ நாள்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது, நான் அப்போது மிகச் சிறந்த ஒரு பாடத்தைக் கற்றேன், அதாவது ஒன்றாக இணைந்து போரிட்டால், போரின்போது சோர்வு ஏற்படாது என்பதே அது என்று சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளார்.
நான் அனைத்து பஞ்சாப் மக்களுக்கும் அறிவுறுத்துகிறேன், கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிடுங்கள், இது மிக நீண்ட போராக இருக்கும், இந்த சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம், மிக முக்கியமக நமது மன உறுதியை பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என்று அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே கரோனா பரிசோதனை மேற்கொண்டு கரோனாவை உறுதி செய்து, சிகிச்சை அளிப்பது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை மாநிலத்தில் 6.15 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.