பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் தவறு என இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முதல் பொது முடக்கம் அமலானதிலிருந்தே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதைத் தொடர்ந்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் சேவை ரத்து தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், இந்த ரயில் சேவை ரத்து ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்தத் தகவல் தவறானது என ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.