கேரளத்தின் ஆலப்புழாவில் 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், சுங்கம் குருவெல்லி படசேகரம் பகுதியில் 151 ஆண்டுகள் பழமையான செயின்ட் பால் சி.எஸ்.ஐ தேவாலயம் இருந்தது.
இந்த தேவாலயம் வயல்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை, கனமழை காரணமாக வயல்களில் தடுப்பு உடைந்து, நீர் தேவாலயத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து நீர் தேங்கியிருந்ததால், வலுவிழந்து கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த எதிர்பாரா விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்ததால், அப்பகுதியின் உள்ளூர்வாசிகள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டனர்.
கேரளத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.