பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தனது தொகுதியான உத்தர கன்னடாவின் கும்தா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே,
'பொதுத் துறைகள் அனைத்தும் கரும்புள்ளிகள். எனவே, தான் பிரதமர் மோடி தனியார்துறைக்கான பங்களிப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள். நிதி ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்தும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை செய்ய மறுக்கின்றனர். எந்தப் பகுதியிலும் நெட்ஒர்க் சரியாக கிடைப்பதில்லை. தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் ஊழியர்கள் அதனைப் பயன்படுத்தத் தயாராக இல்லை.
முதற்கட்டமாக அந்நிறுவனத்தின் 80,000 ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர். விரைவில் அனைத்து ஊழியர்களும் வேலையை விட்டு நீக்கப்படுவர்' என்று பேசியுள்ளார்.
பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.