இருபது வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தை ஒன்றிணைத்த கரோனா!
ராஞ்சி: மரணம் மற்றும் துயர தருணங்களுக்கு மத்தியில் இந்த கரோனா காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பிரிந்த குடும்பம் ஒன்று இருபது வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கொதேர்மா மாவட்டம் பெல்கார் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜாதர் சோனார். இவர் இருபது வருடங்களக்கு முன்னர் தனது மனைவி அனீதா தேவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டுச் சென்று விட்டார். சென்றவர் தன்பாத் மாவட்டம் ஜாரியா லிலோலிபத்ரா கிராமத்தில் சத்யநாராயண் என்ற பெயருடன் இத்தனை காலம் தனியாக வசித்து வந்தார்.
தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றின் காரணமாக கஜாதருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தார் அவருக்கு கரோனா பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி அவரது சொந்தங்கள் பற்றி விசாரித்துள்ளனர். அவர் எதுவும் சொல்லாத காரணத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்த போது அவர் தனது சொந்த ஊர் மற்றும் மனைவி குறித்த விபரங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் கொதேர்மா மாவட்ட காவல்துறையைத் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து திங்களன்று கஜாதரின் மனைவி அனீதா மற்றும் மகன் சந்திரசேகர் குமார் இருவரும் தன்பாத் வந்து சேர்ந்துள்ளனர். இருபது வருடங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தை கஜாதர் சந்தித்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல அனீதா சம்மதம் தெரிவித்ததையடுத்து நல்ல முடிவு ஏற்பட்டது.