புது தில்லி: புது தில்லியில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் இது 20 நாள்களாக இருப்பதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 20 நாள்களாக உள்ளது. அதே சமயம் தில்லியில் இரட்டிப்புக் காலம் 50 நாள்களாக உயர்ந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் கடந்த திங்கள்கிழமை 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.46 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேவேளை நாட்டில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,601 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 871 பேர் பலியாகினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 22.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 6.39 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 15.83 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 45,257 பேர் உயிரிழந்துவிட்டனர்.