ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இருவர் மீது, "63 மூன்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் அளித்த ஊழல் புகாரில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை தெரிவித
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இருவர் மீது, "63 மூன்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் அளித்த ஊழல் புகாரில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை தெரிவித்தது.

பொருள்களை மின்னணு முறையில் விற்பதற்கு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய பண்டக சாலை நிறுவனத்தில் (என்எஸ்இஎல்) பல கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்துள்ளது கடந்த 2012-13இல் தெரியவந்ததாகவும், இதில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஃபார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனின் முன்னாள் தலைவர் ரமேஷ் அபிஷேக், மத்திய நிதி அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் கே.பி.கிருஷ்ணன் ஆகியோரின் தலையீடு காரணமாக தங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் "63 மூன்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐயிடம் புகார் அளித்தது.

 ஆனால் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி அந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் 20இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிபிஐ உயர்நீதிமன்றத்தில் பதிலளித்தது.

 இந்நிலையில் இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.ஜாதவ், என்.ஜே.ஜமாதர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் ஹிதேன் வெனெகாவ்கர் ஆஜராகி வாதாடுகையில், இந்தப் புகாரில் முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 2012}13இல் இருந்து இந்த வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்து குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராயவும், தேவையான ஆவணங்களைப் பெற வேண்டியும் உள்ளது. இதுவரை மனுதாரர் நிறுவனத் தரப்பில் இருந்து எந்த ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து, 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆபாத் பாண்டா வாதிடுகையில், "ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி புகார் பெறப்பட்ட 4 மாதங்களுக்குள் முதல்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பிப்ரவரியில் முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஜூலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம் என்றார்.

இதையடுத்து விசாரணை நிலவரம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com