கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை கௌரவிக்கும் பொருட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். பணியின்போது அவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். அதில் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
'கரோனா தொற்றுநோய் காலத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதில் தங்கள் உயிரை பணயம் வைத்து காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினர் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது சேவையை நாங்கள் மதிக்கிறோம்' என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும், கொல்கத்தா காவல்துறை தொடர்பான சில புதிய திட்டங்களை அறிவித்த அவர், காவல்துறையில் பெண்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.