கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபையிலிருந்து கோழிக்கோடுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 140 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 90 பேர் வரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் பல தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இவர்களில் 26 பேருக்கு கரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை தலைவர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் இருவர் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.