மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக ஊடகத்தில் பரப்பிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் வசிப்பவர் மிலிந்த் இங்கிலே. இவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து பாஜக சட்டப்பிரிவைச் சேர்ந்த உள்ளூர் பொறுப்பாளர் இந்தூரின் ஹீரநகர் காவல்துறையில் புகாரளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ஹீரநகர் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் கூறுகையில், “புகாரின் படி பிரதமரின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துடன் வெளியிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 188 இன் மீறல் என்று கண்டறியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.