தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார் பெயரில் போலி முகநூல் பக்கத்தைத் தொடங்கி மக்களின் பணத்தை மோசடி செய்த உ.பி. சிறுவன் கைது செய்யப்பட்டான்.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி போலி முகநூல் பக்கம் குறித்து காவல்துறைக்கு வந்த புகாரினைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தெலங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினரின் விவரங்களை இணையதளம் மூலம் சேகரித்து, அவரது பெயரில் போலியான முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளான் அந்த சிறுவன். அதில், தனது நண்பரின் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாகவும், பொதுமக்கள் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளான். இவ்வாறு கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.