உத்தரப்பிரதேசத்தில் விசா விதிமீறலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நீண்டகால விசா அனுமதி பெற்று தில்லியில் உள்ள தனது கணவருடன் வாழ்ந்து வரும் நிலையில், விசா விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் கராச்சி பகுதியை சேர்ந்த நெளஷீன் நாஸ் என்ற பெண் நீண்டகால விசா அனுமதி பெற்று தில்லியில் உள்ள தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே சனிக்கிழமையான நேற்று அவர் நீண்டகால விசா விதிமுறைகளுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதிக்கு வந்துள்ளார். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நொய்டா பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசா விதிமுறைகளுக்கு மாறாக தில்லியிலிருந்து நொய்டாவிற்கு சென்றுள்ளார்.
அவரை மடக்கி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தில்லியில் மட்டுமே வசிக்க நீண்டகால விசா எடுத்து வந்துள்ள அவர், விதிமுறைகளுக்கு மாறாக நொய்டா வந்துள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் விதிமீறல் வழக்குப்பதிவு செய்தனர். ஊரடங்கின்போது பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பயணம் மேற்கொண்டதால் அவர் விசா விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.