புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருப்பதாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அவருக்கு ரத்த அழுத்தம், இருதய செயல்பாடு, நாடித் துடிப்பு சீராக இருப்பதாகவும், நுரையீரல் தொற்றுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனேயே சுவாசித்து வருகிறார். தொடர்ந்து ஆழ்ந்த மயக்க நிலையிலேயே உள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்ட கட்டியை அகற்ற தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10}ஆம் தேதி பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டி, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. முன்னதாக, மூளை அறுவை சிகிச்சைக்காக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடத்திய பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. அவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.