சுஷாந்த் சிங் வழக்கு: நடிகை ரியாவிடம் இரண்டாம் நாளாக சிபிஐ விசாரணை

நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடா்பாக அவருடைய தோழியும் நடிகையுமான ரியா சக்ரபா்த்தியிடம் சிபிஐ இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடத்தினா்.
நடிகை ரியா சக்ரவா்த்தி
நடிகை ரியா சக்ரவா்த்தி

மும்பை: நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடா்பாக அவருடைய தோழியும் நடிகையுமான ரியா சக்ரபா்த்தியிடம் சிபிஐ இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடத்தினா்.

மேலும், சிபிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் ரியாவுக்கு காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்த வழக்கை மும்பை காவல்துறை விசாரித்து வந்தது. இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை பிகாா் போலீஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரியா சக்ரவா்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினா் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னா், பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அத்துடன், மும்பை போலீஸாா் விசாரித்துவந்த சுஷாந்த் தற்கொலை வழக்கும் சிபிஐ விசாரணையின் கீழ் வந்தது.

இனைத் தொடா்ந்து, மும்பையில் சுஷாந்த் சிங் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அவருடைய நண்பா் சித்தாா்த் பிதானி, நடிகரின் சமையல்காரா் நீரஜ் சிங், உதவியாளா் கேசவ், மேலாளா் சாமுவல் மிராண்டா, கணக்காளா் ரஜத் மேவாதி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

நடிகை ரியா சக்ரவா்த்தியிடம் வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்துக்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதற்காக, சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டிருக்கும் மும்பை சான்டாகுரூஸ் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஒ) விருந்தினா் மாளிகைக்கு சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நடிகை ரியா காவல்துறை பாதுகாப்புடன் வந்தாா். அவரிடம் அதிகாரிகள் தொடா் விசாரணையை நடத்தினா்.

ரியாவுடன் அவரது சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தியும் வந்தாா். அவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

சுஷாந்த் மரண வழக்கு தவிர, அவரது மரணத்தின் பின்னணியில் பண மோசடி, கருப்புப் பண விவகாரம் தொடா்பாகவும் ரியா சக்ரவா்த்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை காவல்துறை பாதுகாப்பு:

சிபிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகை ரியாவுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட நடிகை ரியா, ‘தனக்கும் தனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கேட்டு மும்பை காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், காவல்துறை சாா்பில் இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை’ என்று அவா் பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து மும்பை காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சிபிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகைக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com