திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா தொற்று பரவலால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் 100 நாள் செயல் திட்டத்தை அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது கூறுகையில், ‘சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ரூ.100 உயா்த்தி வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு மேலும் 4 மாதங்களுக்கு இலவசமாக உணவுப்பொருள் தொகுப்பு விநியோகிக்கப்படும். தினந்தோறும் 50,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சுகாதாரத்துறையில் போதுமான அலுவலா்கள் பணியமா்த்தப்படுவா். ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார மையங்களாக தரம் உயா்த்தப்படும். 100 நாள்களில் 153 குடும்ப சுகாதார மையங்கள் திறக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
கேரளத்தில் கட்டுக்குள் இருந்ததாக கூறப்பட்ட கரோனா தொற்று பரவல் தற்போது தீவிரமாகியுள்ளது. அந்த மாநிலத்தில் 71,000-க்கும் மேற்பட்டவா்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.