மத்தியப்பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று பார்வையிட்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால் மகாகோஷல் பிராந்தியத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பென்ச் மற்றும் நர்மதா ஆற்றங்கரையோரம் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோஷங்காபாத், செஹோர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இப்பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான், இன்று (திங்கள் கிழமை) படகில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.