கடுமையான பனிப்பொழிவு காரணமாக அடல் சுரங்கம் பகுதியில் மணாலி - லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலைமை சரியாகும்வரை பொதுமக்கள் நெடுஞ்சாலை வழியே பயணிக்க வேண்டாம் என்று ஹிமாசலப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் குறிப்பாக ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
ஹிமாசலில் பழங்குடிகள் வசிக்கும் லஹால் மற்றும் ஸ்பிட்டி பகுதிகளில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோஹ்தாங் அடல்சுரங்கத்திலிருந்து லஹால் பள்ளத்தாக்கு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இப்பகுதியில் செல்வது ஆபத்தானது என்றும் நிலைமை சரியாகும் வரை மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.