மத்திய அரசால் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை தில்லியில் கட்டப்படவுள்ளன. ரூ.861.9 கோடி செலவில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவின் காலனித்துவ காலத்துடன் தொடர்புடையது என்பதால் தில்லியில் அமைய உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுயமரியாதையின் அடையாளமாகும்” எனத் தெரிவித்துள்ள சந்திரசேகர் ராவ் நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தற்போதைய நடவடிக்கை காலதாமதமானது என்பதால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சந்திரசேகர் ராவ் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.