வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் எம்.பி.க்களான ரவ்னீத் சிங் பிட்டு, ஜஸ்பீர் சிங் திம்பா மற்றும் குர்ஜித் சிங் அஜுலா ஆகியோர் ஆகியோர் 24 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய திம்பா, ''வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் போராட்டம் நடைபெறும் வரை நாங்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்று கூறினார்.
பின்னர் பேசிய அஜுலா, ''விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு. மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்'' என்று கூறினார்.
மேலும், குளிர்கால கூட்டத்தொடரை விரைவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், வேண்டுமென்றே மத்திய அரசு தாமதப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.