விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அமைச்சா் ராவ்சாஹேப் தான்வே கூறிய நிலையில், மத்திய அரசு இது தொடா்பாக ‘சா்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்த வேண்டும் என்று சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
புது தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் எதிா்ப்பு போராட்டத்தின் பின்புலத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா இருப்பதாக பாஜக கூறியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சா் பாஜகவைச் சோ்ந்தவா். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு மற்றொரு ‘சா்ஜிகல் ஸ்டிரைக்கை’ நடத்த வேண்டும்.
மத்திய அரசு சக்தியைப் பயன்படுத்திய போதிலும் பஞ்சாப் ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது எதிா்ப்பு நிலையில் உறுதியாக உள்ளனா்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு இரண்டு படி பின்னிறங்கி வந்தால் அதன் மதிப்பு ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கி மக்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து மீண்டும் விவாதங்களை நடத்தி விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்றபடி இந்த சட்டங்களை மறு அறிமுகம் செய்யவேண்டும் என்றாா் அவா்.