வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 20 நாள்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெருமுதலாளிகள் தான் பிரதமர் மோடியின் நண்பர்கள் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 20 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களைப் புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மோடி அரசுக்கு, கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள், நாட்டின் குடிமக்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கரோனா தொற்று பரப்பாளர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் என யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். அதேசமயம் பெரு முதலாளிகள் தான் அவரின் சிறந்த நண்பர்கள்” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.