9 மாதங்களுக்குப் பிறகு புரி ஜகந்நாதர் கோயில் திறப்பு: ஜன.3 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஒடிஸô மாநிலத்தில் உள்ள புரி ஜகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது. 
9 மாதங்களுக்குப் பிறகு புரி ஜகந்நாதர் கோயில் திறப்பு: ஜன.3 முதல் பக்தர்களுக்கு அனுமதி


புரி: ஒடிஸô மாநிலத்தில் உள்ள புரி ஜகந்நாதர் கோயில் 9 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற புரி ஜகந்நாதர் கோயில், 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோயில் நடை திறப்பு தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டிசம்பர் 23 ஆம் தேதி முதல் கோயிலைத் திறக்கவும், ஜனவரி 3 ஆம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடுமையான கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி புதன்கிழமை காலை 7 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதாக புரி மாவட்ட ஆட்சியர் பல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறும்போது, டிசம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரை கோயிலில் சேவையாற்றுபவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு டிசம்பர் 26 முதல் 31 ஆம் தேதி வரை புரி நகரவாசிகள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். புரி நகர மக்கள் வார்டு வாரியாக குறிப்பிட்ட நாள், நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயிலில் அதிகளவிலான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் மீண்டும் கோயில் நடை அடைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்துக்காக ஜனவரி 3-ஆம் தேதி கோயில் மீண்டும் திறக்கப்படுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கோயிலுக்குள் மலர்கள், துளசி போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
புரி நகர கரோனா நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியும் என்பதால், உள்ளூர்வாசிகள் தங்களுக்கு கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிம்ம வாசல் வழியாக நுழைந்து மற்ற மூன்று வாசல்கள் வழியாக வெளியேறலாம்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகள் கழுவுவதற்காக கோயிலுக்கு வெளியே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com