குடியரசுத் தலைவரை சந்திக்கும் விதமாக தில்லியில் பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி குடியரசுத்தலைவரை சந்திக்கும் விதமாக விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமனா எம்.பி.க்களும், கட்சியினரும் கலந்துகொண்டனர்.
பேரணியானது குடியரசுத் தலைவர் மாளிகையை நெருங்கியபோது தடையுத்தரவை மீறி பேரணி மேற்கொண்டதாகக் கூறி காவல்துறையினர் ராகுல்காந்தி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
தில்லியில் கரோனாவால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பேரணி சென்றதால் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 கோடி கையெழுத்துகளை அளிக்க பேரணியாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.