பாட்னா: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 34-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிகாரில் விவசாய அமைப்பினரும், இடது சாரிகளும் இணைந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் மாளிகை அருகே காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக வந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். எனினும் போராட்டக்காரர்கள் காவல்துறையின் தடையை மீறி ஆளுநர் மாளிகை நோக்கி முன்னேறினர்.
அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.