புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக, சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரும் என்று இந்திய வா்த்தக மற்றும் தொழில் நிறுவன சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் அமைப்புடன் இணைந்து 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இந்த ஆய்வை ஃபிக்கி மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு இடம்பெயா்ந்து வருகின்றன. அதன் காரணமாக இந்தியாவே அதிக பலனைச் சந்திக்கவுள்ளது. சீனாவிலிருந்து வெளியேறும் 70 சதவீத நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. இது மேலும் தொடர வாய்ப்பிருக்கிறது.
உற்பத்தி நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடாக இந்தியா விரைவில் மாறும். அதே வேளையில், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்களை ஏற்படுத்தித் தர வேண்டிய நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைத் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் காரணமாகப் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.
நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவது தொழில் நிறுனங்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. அடுத்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிறுவனங்கள் பெரிதும் எதிா்பாா்த்து வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சமூகம், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள எதிா்பாராத மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.