புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது நிறுவன தின விழாவில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காத நிலையில், தலைமையகத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கட்சிக் கொடியேற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது நிறுவன தின விழா தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவரும் சோனியா காந்தி இவ்விழாவிலும் பங்கேற்கவில்லை. ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் அவராலும் பங்கேற்க இயலவில்லை. விழாவில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சச்சின் பைலட் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறியது: விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் சதி எனக் கூறுவது தவறு. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்கள் விவசாயிகளின் மகன்கள். விவசாயிகள் நாட்டுக்கு உணவு வழங்குபவர்கள். அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் ராகுல் காந்தி பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பிரியங்கா பதிலளிக்கவில்லை. தனிப்பட்ட பயணமாக ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு சென்றுள்ளார். அவர் எங்கு சென்றுள்ளார் என கட்சி தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலி சென்றுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.