நாட்டின் 3-ஆவது தனியார் ரயில், இந்தூர்-வாராணசி இடையே இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக, அடுத்த 5 ஆண்டுகளில் 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்குவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான வரைவு திட்ட அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் முதல் தனியார் ரயில் தில்லி-லக்னெள இடையே இயக்கப்பட்டது. அதையடுத்து, இரண்டாவது தனியார் ரயில், ஆமதாபாத்-மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3-ஆவது தனியார் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது: ரயில்வேயின் 3-ஆவது தனியார் ரயில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாராணசி இடையே இயக்கப்படவுள்ளது. ஒரு வாரத்தில் 3 நாள்கள் இந்த ரயில் இயக்கப்படும். 2 நாள்கள் லக்னெள வழியாகவும், ஒரு நாள் அலாகாபாத் வழியாகவும் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளும் படுக்கைகளாக (பெர்த்) மட்டுமே இருக்கும். அமர்ந்து செல்லும் வகையிலான இருக்கைகள் இந்த ரயிலில் இருக்காது. ரயில்களை தனியார் நிறுவனங்கள் இயக்குவதற்கான முடிவை ரயில்வே அறிவித்தது முதல், இந்த திட்டத்தில் பணியாற்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அவர் கூறினார்.
ரயில்வேயின் தனியார் மயமாக்கல் திட்டத்தில், உள்கட்டமைப்பு, ரயில் இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ரயில்வே கவனித்து கொள்ளும்.