எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை எச்சரித்தார்.
கேரளப் பேரவைக் கூட்டத்தின் போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களில் சுமார் 200 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டி காங்கிரஸ் உறுப்பினர் ரோஜி எம்.ஜான் மற்றும் கே.சி.ஜோசப் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான அறவழிப் போராட்டங்களில் எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டுகிறது. சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற குற்றச்செயல்களைக் கண்டு அரசு அமைதியாக இருக்காது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். சமூக சீர்கேட்டில் ஈடுபடும் எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பின்னர் தொடர்ந்து பேசிய பினராயி விஜயன், எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்து பேசும்போது எதிர்க்கட்சிகள் எதற்கு கவலைப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்துப் பேசிய எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, நாங்கள் யாரும் எஸ்டிபிஐக்கு ஆதரவு அளிக்கவில்லை. கேரள அரசு அமித் ஷா கொள்கைகளை பின்தொடர வேண்டிய அவசியமில்லை. உத்தரப்பிரதேசத்தைப் போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
பின்னர், மணல் கொள்ளைக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.