எந்தவொரு விவகாரம் குறித்து வேண்டுமானாலும் அமித் ஷாவுடன் விவாதம் நடத்தத் தயார் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,
"தில்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஷகீன் பாக் போராட்டத்தை வைத்து பாஜக இழிவான அரசியலை செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக தில்லிக்கு என்ன செய்தது என்பதை அறிய தில்லி மக்கள் விரும்புகின்றனர். தில்லி மக்களுக்கான இலவசத் திட்டங்களை பாஜக எதிர்ப்பது ஏன் என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
மக்களிடம் வாக்குகளை சேகரிக்கும் அமித் ஷா, தில்லி முதல்வர் யார் என்பதை தானே தீர்மானிப்பேன் என கூறுகிறார். தில்லி மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
தில்லி மக்கள் தங்களது ஜனநாயக முடிவை எடுப்பதற்கு முன் எந்தவொரு விவகாரம் குறித்து வேண்டுமானாலும் அமித் ஷாவுடன் விவாதம் நடத்தத் தயார். அவர் திறந்த மனதுடனும் நேர்மையுடனும் வர வேண்டும். விவாதத்துக்கான இடத்தையும், நேரத்தையும் அவரே தீர்மானிக்கட்டும்.
முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்சிக்கு விருப்பம் இல்லையென்றால், குறைந்தபட்சம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ள தலைவர்களின் பெயரையாவது அமித் ஷா வெளியிட வேண்டும்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததையும், ராமர் கோயிலைக் கட்ட வழிவகுத்ததையும் நீங்கள் (பாஜக) மக்களிடம் சொல்கிறீர்கள். இதற்காக 2019 மக்களவைத் தேர்தலிலேயே மக்கள் உங்களுக்கு வாக்களித்துவிட்டனர்.
என்னைப் போன்ற சிறிய நபரைத் தோற்கடிப்பதற்காக பாஜக ஆளும் மாநிலங்களின் 10 முதல்வர்கள் மற்றும் 70 மத்திய அமைச்சர்களை அக்கட்சி பிரசார களத்தில் இறக்கியது" என்றார்.